வெளியிடங்களில் ஏற்படும் பாதிப்பை விட, இணையதள பயன்பாடு காரணமாகவே குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று 54 சதவிகிதஇந்திய பெற்றோர்கள் அச்சப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சைமென்டெக்' மென்பொருள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன் முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய கிளையின் மேலாளர் ரிதேஷ் சோப்ரா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
11 வயதுக்குள்பட்ட குழந்தைகள், வெளியிடங்களில் விளையாடும்போது ஏற்படும் பாதிப்புகளை விட, இணையதள பயன்பாடு காரணமாகவே அதிகம் பாதிக்கப்படுவதாக 54 சதவிகித இந்திய பெற்றோர்களின் அச்சமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேவேளையில், 11 வயதுக்கு முன்னரே தங்களது குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த அனுமதிப்பதாக 40 சதவிகித பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல, இணைய பயன்பாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதும், இப்பிரச்னையை எப்படி கையாள்வது என்பது புரியாமல் பெற்றோர்கள் திணறி வருவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களது சுயவிவரங்கள் அனைத்தையும் முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்வதாகவும் இணையம் மூலம் பழகி, தெரியாத நபர்களை சந்திப்பதாகவும் 64 சதவிகித பெற்றோரின் கவலையாக உள்ளது. மேலும், குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவதால், குடும்பத்துக்கும் பாதிப்பு வந்து சேருவதாக 62 சதவிகித பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இணையவழி பாதிப்புகளில் இருந்து தங்களது குழந்தைகள் காக்க 7 சதவிகித பெற்றோர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவதை தடுக்க, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளில் இணையவழி பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
பாதிப்புகள் என்னென்ன?: இணையவழி அச்சுறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காணுவது என்பது தொடர்பாக ரிதேஷ் சோப்ரா கூறுகையில், "குடும்பத்தினரை விட்டு தனித்திருத்தல், இணையவழி நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொள்வது, உடல் எடை மெலிவது, வலுவிழப்பது, எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பது, தூக்கமின்றி தவிப்பது' போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைகள் இணையவழி பாதிப்பை சந்தித்துள்ளனரா என்பதை கண்டறிந்து கொள்ளலாம்' என்றார்