அரிதான மரபணு நோய்களின் சிகிச்சைக்காக அரசு நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும் என்று அரிதான மரபணு நோய்கள் விழிப்புணர்வுக்கான விளம்பரத் தூதுவரான நடிகர் கார்த்தி கூறினார்.
அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கத்தின் (எல்.எஸ்.டி.எஸ்.எஸ்.) சார்பில் இந்திய அரிதான மரபணு நோய்கள் தினம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மரபணு மருத்துவ நிபுணர் சுஜாதா ஜெகதீஷ் பேசியது: மரபணு தொடர்பான நோய்கள் சுமார் 40 வகைகள் உள்ளன. அவற்றில் 5 நோய்களுக்கு மட்டுமே இந்தியாவில் சிகிச்சை கிடைக்கிறது. தமிழகத்தில் அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கத்தில் 450 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். சிகிச்சை இல்லாமல் அவற்றில் 20 குழந்தைகள் இறந்துவிட்டனர். மீதம் உள்ள குழந்தைகளில் 30 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு குழந்தைகள் மருத்துவமனைகளில் மரபணு குறைபாடுள்ள குழந்தைகளைப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
விழாவில், கரு பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுரேஷ் பேசியது: மரபணு குறைபாடுகளுக்கு நிரந்தர குணமடைதல் என்பது இல்லை. ஆனால் 3 மாத கர்ப்பத்திலேயே மரபணு குறைபாடுகளைக் கண்டறிந்தால் குறைபாட்டோடு குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.
இதையடுத்து, நடிகர் கார்த்தி கூறியது:- மரபணு குறைபாடுகளால் பிறக்கும் குழந்தைக்கு ஆயுள் முழுவதும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும் என்றார்.