முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல நூறு மருத்துவர்கள் வந்து பங்கேற்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கானச் சேவை பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியது: அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக, மருத்துவக் கல்வி இயக்கத்தில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்போம் என்றார்.
அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமையும் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 6-ஆவது நாளாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.