சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சிறுவர்கள் அருள்குமரன் (11), மிதுன்(9) ஆகியோர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் நிபுணர் பாலசுப்ரமணியம் கூறியது:
இந்த குழந்தைகளுக்கு பிறவிலேயே சிறுநீரகம் வளர்ச்சியடையவில்லை. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் காணப்பட்டது. எனினும் இருவரும் மருந்துகளின் மூலமே சமாளித்து வந்தனர். குழந்தைகள் வளர வளர மருந்துகளின் மூலம் கையாள்வது சிரமமாக இருந்தது.
மேலும் ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையே தீர்வாகும். எனவே, இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இரு குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களே சிறுநீரகத்தை தானம் செய்தனர்.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.