வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் மூளையில் அறுவை சிகிச்சை செய்து நோய்க்கு காரணமான திசு அகற்றப்பட்டுள்ளது. இந்த அரிய அறுவை சிகிச்சை, சென்னை அடையாறில் உள்ள ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாதைச் சேர்ந்த சிறுமி பிரியாவுக்கு (15) பத்து வயதில் இருந்து வலிப்பு நோய் இருந்தது. இரவில் வலிப்பு ஏற்படுவதால் பகல் முழுவதும் மயக்கநிலையும், அசதியும் காணப்படும். 10 வயதில் அவருக்கு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக 2 ஆண்டுகள் வலிப்பு நோய் ஏற்படவில்லை.
இதையடுத்து வலிப்புக்கான மருந்துகளைத் தொடர வேண்டாம் என்று மருத்துவர் நிறுத்தியுள்ளார். அடுத்த ஒரு மாதத்தில் அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இதற்காக வழங்கப்பட்ட மருந்துகளும் பலன் தரவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த வலிப்புநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மருத்துவமனையின் மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் தினேஷ் நாயக் கூறியது:
சிறுமிக்கு வலிப்பு நோய் தாக்கத்துக்கான தோற்றம் மூளையின் எந்தப் பகுதியில் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதற்கான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முடிவுகள் மாறுபட்ட முடிவுகளைக் காட்டின.
இதையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் 56 எலக்ட்ராடுகள் (மின்முனைகள்) மூளைப் பகுதியில் பொருத்தப்பட்டன. அதன் மூலம் சிறுமிக்கு வலிப்பு ஏற்படும் சமயம் அதன் தாக்கங்கள் பதிவு செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், மூளை மேற்பரப்பில் இருந்து சுமார் 4 செ.மீ. ஆழத்தில் வலிப்பு நோய்க்கு காரணமான திசு கண்டறியப்பட்டது. மீண்டும் மூளையில் குறுகலான பாதை வழியாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் 2 செ.மீ. நீளமுள்ள மூளை திசு வெட்டி அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமி பிரியா இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.