மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வேலூரில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (14), இவரது உறவினர் விஜய் (17), அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (21) ஆகிய மூவரும் பைக்கில் புதன்கிழமை அதிகாலை வேலூர் நேதாஜி மார்கெட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
காகிதப்பட்டரை பகுதி அருகே சென்ற போது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியது.
இதில் 3 பேரும் நிலைத்தடுமாறி விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ இவர்கள் மீது மோதியது. இதில் ஆனந்தன் நிகழ்விடத்திலேயே இறந்தார். விஜய் லேசான காயமடைந்தார். பலத்த காயமடைந்த பாலாஜி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், பாலாஜி வியாழக்கிழமை மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏழுமலை, மரகதம் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
பின்னர், இவருடைய இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை போர்டீஸ் மலர் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கல்லீரல் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இதையடுத்து, சிறப்பு மருத்துவக் குழுவினர் இருதயம், மற்ற உடல் உறுப்புகளை சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னைக்கு கொண்டு சென்றனர்.