நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளில் சிக்கி முகம், தாடை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முகச் சீரமைப்பு பல் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது என்று இந்திய வாய்-முக சீரமைப்பு மருத்துவர்கள் சங்கச் செயலர் டாக்டர் எஸ்.ராம்குமார் கூறினார்.
வண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச வாய்-முக சீரமைப்பு மருத்துவர்கள் தின விழாவில் அவர் மேலும் பேசியது: கடந்த 10 ஆண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று வரும் பல் மருத்துவத் துறை, வாய்ப்புற்று நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், விபத்தில் சிக்கியவர்களின் முகத்தைச் சீரமைப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பல் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.