மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்கு தலைவலி பிரச்னை காணப்படுகிறது என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கான பிரத்யேக சிகிச்சை மையம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நரம்பியல் நிபுணர்கள் மீனாட்சி சுந்தரம், அருள்செல்வன் ஆகியோர் பேசியது:
மக்கள்தொகையில் 10 முதல் 20 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையான தலைவலியால் அவதிப்படுகின்றனர். இளைஞர்கள், வேலைப்பளு உள்ளவர்களுக்கு அதிகம் தலைவலி பிரச்னை காணப்படுகிறது.
தலைவலியை சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தினால், முடிவில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். மன ரீதியான பிரச்னைகளால் ஏற்படும் தலைவலி மனஅழுத்தம், சோர்வு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் தலைவலி, ஒற்றைத் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வில் 35 சதவீதம் பேருக்கு பதற்றத்தினால்
(பங்ய்ள்ண்ர்ய்) தலைவலியும், 25 சதவீதம் பேருக்கு ஒற்றைத் தலைவலியும் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மரபணு காரணமாக பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கும் ஒற்றைத் தலைவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒற்றைத் தலைவலி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது இல்லை. வயது ஆக ஆக பெரும்பாலானவர்கள் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவபடுவர். நிரந்தரத் தீர்வு இல்லாவிட்டாலும் பல்வேறு சிகிச்சைகளின் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி சிகிச்சை மையத்தில் மருத்துவச் சிகிச்சைகளுடன், உளவியல் ஆலோசனை, யோகா உள்ளிட்டவை அளிக்கப்படும்.
அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.