சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மில் தொழிலாளியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கியதன் மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் தாலுகா ராம் நகரைச் சேர்ந்தவர் என்.செல்வராஜ் (43). இவர், பொங்கலூரில் இருந்து பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை புதன்கிழமை அகற்றப்பட்டு சென்னை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.