பிரென்சு ஃப்ரை, உருளை சிப்ஸ், சாப்ஸ் போன்ற அதிகமாக வறுத்தும் பொறித்தும் தயாரிக்கப்படும் உணவுகள் உடல் நலத்துக்கு மிகவும் கெடுதலை விளைவிக்கும். எந்த அளவுக்கு எனில், இத்தகைய உணவை அடிக்கடி சாப்பிடுவோரின் இறப்பு சதவிகிதம் மற்ற உணவு உட்கொள்வோரின் இறப்பு சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 4,440 நபர்கள் 8 ஆண்டு காலம் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு சாரார் ஆண்டுக்கு 14 கிலோ அளவிலில் உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட ஃபிரென்ச் ஃப்ரையை மிகவும் விரும்பிச் சாப்பிட்டவர்கள். கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தில் சீர் கேடு தொடங்கியது. உடல் பருமன், கொழுப்பு சத்து அதிகரிப்பு, டைப் 2 டயபடீஸ் போன்ற பல பிரச்னைகளுக்கு அவர்கள் உள்ளாகினர். அதில், 236 நபர்கள் இறந்து விட்டனர்.
இதற்குக் காரணம் உருளைக்கிழங்கை அதிகமான எண்ணெயில் மிக அதிகமான சூட்டில் பொறித்தும் வறுத்தும் சாப்பிடுவதால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடுகிறது. நாளாவட்டத்தில் இது அச்சுறுத்தும் விதமான நோய்களுக்கு வழிவகுத்துவிடுகிறது. சிக்கன் ஃப்ரை, க்ரில்ட் சிக்கன், கபாப், டீப் ஃபிஷ் ஃப்ரை, ஃபிங்கர் சிப்ஸ், பிரென்ச் ஃப்ரை போன்ற உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்கள், இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின் மூலம் ஃபிரன்ச் ஃப்ரை சாப்பிடுவது இறப்பு சதவிகிதத்தை அதிகரித்துவிடும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.