சிறுவன் தவறுதலாக விழுங்கிய பட்டன் பேட்டரி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன், தனம் தம்பதியரின் மகன் தருண் (10). தருண் கடந்த 28-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது வானொலி ரிமோட்டில் இருந்த சுமார் 1.5 செ.மீ. அளவுள்ள பட்டன் பேட்டரியை வாயில் இட்டவாறே விழுங்கியுள்ளான்.
இதனையடுத்து சிறுவனை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பட்டன் பேட்டரியை எடுக்க இயலவில்லை.
இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் பேட்டரி பட்டன் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பல நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சிறுவன் விழுங்கிய பட்டன் பேட்டரி, உணவுக் குழாயில் சிக்கியிருந்தது. சுமார் 48 மணி நேரம் உள்ளே இருந்ததால் அதிலிருந்து அமிலங்கள் வெளியேறி உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கியிருந்தது.
இருப்பினும், அது இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சைத் துறையில் என்டோஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டது. சுமார் 110 செ.மீ. அளவுள்ள என்டோஸ்கோப்பி கருவி சிறுவனின் வாய் வழியாகச் செலுத்தப்பட்டு உணவுக் குழாயில் இருந்து பட்டன் பேட்டரி அகற்றப்பட்டது.
சட்டை பட்டன், நாணயங்கள், செயற்கைப் பற்கள் உள்ளிட்டப் பல்வேறு பொருள்கள் இதற்கு முன் மருத்துவமனையில் அகற்றப்பட்டுள்ளன. அமிலத்தை வெளியேற்றும் பட்டன் பேட்டரி அகற்றப்பட்டது இதுவே முதன்முறை. குறிப்பிட்ட காலத்தில் அகற்றப்படாவிட்டால் அது உணவுக் குழாயில் ஆழமாக அரிப்பை ஏற்படுத்தி சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார் அவர்.