வழக்கமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் புளி 'உரிகம் புளி' என்றழைக்கப்படுகிறது. ஆனால் குடம்புளி பற்றி பலருக்கும் தெரியாது. இதை கேரளத்தில் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதை தினமும் உணவில் சேர்ப்பதால் நோய்கள் வராது. உடல் மெலிவுக்கு ஏற்றது. இதன் மற்றொரு பெயர் 'கொருகாப்புளி' . இதை உணவில் சேர்க்கும்போது சிறிது நேரம் மட்டுமே நீரில் கரைக்க வேண்டும். இல்லாவிட்டால் புளிப்புத்தன்மை அதிகரிக்கும். சாதாபுளி நீளவாக்கில் இருக்கும். இவை நெல்லிக்காய் வடிவில் காணப்படும்.
இப்புளியில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயமின், ரிபோப்ளவின், நியாசின், ஹைட்ரோ சிட்ரிக் அமிலம் போன்றவை உள்ளன. இதை பயன்படுத்துவதால் கொழுப்பு குறையும். கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
குறிப்பாக உடல் மெலிவுக்கு சிறந்த நிவாரணி. கறிவேப்பிலை, முருங்கையிலை,கருஞ்சீரகம் இவற்றை குடம்புளியுடன் சம அளவு எடுத்து உலர்த்தி, இடித்து பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வர உடல் எடைகுறையும். ஆறாத வெட்டுக்காயத்துக்கு இதன் இலையை அரைத்து கட்டினால் குணமாகும். மேலும், குடல்புண், வாதத்துக்கு சிறந்த மருந்து.
தகவல்: ஆர். ரக்ஷனாசக்தி