புற்றுநோய் அனைவரையும் அச்சுறுத்தி வரும் நோயாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் முந்தைய ஆண்டுகளைவிட 20 சதவிகிதம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, 2020-ம் ஆண்டுக்குள் இது மேலும் அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
மனித உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளரவும், நோய் தாக்காமல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது இந்த உயிரணுக்கள்தான். இவை உடலில் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தப் பணியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடும். பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழும். இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் கட்டிகளாக முளைக்கின்றன. கேன்சர் ஏற்பட காரணங்களுள் முக்கியமான ஒன்றுதான் இத்தகைய கட்டிகள்.
ஆனால் எல்லா கட்டிகளுமே புற்றுநோயை உருவாக்கிவிடக் காரணமாகும் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத சில கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய தேவையற்ற கட்டிகளை ஆபரேஷன் செய்து அகற்றிவிட்டால் அவை மீண்டும் தோன்றாது. உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவாது. ஆனால் சிகிச்சை எதுவும் செய்யாமல் அது என்ன கட்டி என்றே அறியாமல் அப்படியே விட்டுவிடக் கூடாது. உடலிலுள்ள அக்கட்டிகளால் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிடும். அவை உடலுள்ள ஏனைய திசுக்களை தாக்கி அழிக்கத் தொடங்கிவிடும். அவை ரத்தம் மற்றும் சீழாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, புற்றுநோயின் கடைசி கட்டமாக, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மரணம் ஏற்படும்.
என்ன காரணம்?
புற்றுநோய் ஒருவரைத் தாக்க, ஒருசில குறிப்பிட்ட காரணங்கள் மட்டும் சொல்ல முடியாது. அடிப்படைக் காரணமான உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் தவிர்த்து கீழ்க்கண்ட சில காரணங்கள் உள்ளிட்ட பலவிதமான உடல் கூறு பிரச்னைகளால் புற்றுநோய்த் தோன்றுகிறது என்கின்ற ஆய்வு முடிவுகள்.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:
புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. அது உடலில் பரவிய பிறகுதான் வலி ஏற்படும். உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகத் தொடங்கும். மேலும் உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஆறாத புண் கட்டி, தடிப்பு ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு, இருமும் போது ரத்தம் வருதல், மூச்சடைப்பு வீசிங் பிரச்னைகள், உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமம், விழுங்கும் போது வலி, தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல் நாக்கை அசைப்பதில் சிரமம் ஏற்படுதல். உடலில் கட்டி தோன்றி அது குணமடையாமல் இருத்தல், காரணம் இல்லாமல் உடல் எடை இழத்தல், கண்கள், தொண்டை, கழுத்து, வாய்ப் பகுதிகளில் வீக்கம், காது வலி போன்றவை இதன் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையென்றால் 7 செண்டிமீட்டர் வரை வளரக் கூடிய அந்த புற்றுநோய்க் கட்டி தொண்டையில் வளர்ந்து, அங்கேயே உறைந்துவிடுவதுடன், உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும்.
சிகிச்சை
எவ்வளவு தூரம் முந்திச் செல்கிறோமோ இந்நோயிலிருந்து முழுவதும் மீண்டுவிடலாம். குறிப்பிட்ட நோயாளி கேன்சரின் எந்த ஸ்டேஜில் மருத்துவரை அணுகியுள்ளார் என்பதைப் பொருத்துதான் உயிருக்கு உத்திரவாதம் கிடைக்கும். கேன்சர் வந்துவிட்டதே என்று பயந்து மரணத்தை ஏற்பதைவிட அதனை எதிர்த்து, இது ஒரு நோய் அதனுடன் போராடுவேன் என்று மன வலிமையை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனமுடைந்து போனால் பாதிப்பிலிருந்து வெளிவர நீண்ட காலம் ஆகலாம். எனவே பிரச்னையை உணர்ந்து அதற்கேற்ற தீர்வை தேட வேண்டும்.
மூன்று விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. முதலில் அறுவை சிகிச்சைமூலம் கேன்சர் கட்டியை நீக்குவது. அடுத்து கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) இதில் சக்தி வாய்ந்த கதிர்களை செலுத்துவதன் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக கீமோதெரபி (chemotherapy) மருந்துகள் மூலம் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளமில்லாச் சுரப்பிகள் சிகிச்சை மூலமாகவும் புற்றுநோய் உயிரணுக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. இவற்றில் ஒன்று அல்லது எல்லாவற்றையும் கலந்தும் சிகிச்சை அளிக்கப்படலாம்.
மிகவும் ஆரம்பக்கட்ட நிலையில் சிகிச்சையை தொடங்கி விட்டால், நோய் முழுவதும் குணமாகிவிடும். ஆனால் சில பக்க விளைவுகள் ஏற்படும். அதனை சரி செய்ய மருத்துவரின் ஆலோசனையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். கேன்சர் சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு அதிக சோர்வும் மன அழுத்தமும் ஏற்படும். வலி, நினைவுத் திறன் குறைதல், நரம்பு தொடர்பான பிரச்னைகள், சக்தியின்மை, அடிக்கடி தலைசுற்றல் இன்னும் அந்தந்த நோயாளிக்கேற்ற பிரத்யேகமான பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. அவற்றை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கேன்சரிலிருந்தே மீண்டுவிட்டோம், இவை பக்க விளைவுகள் மட்டுமே. எனவே எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து, நாம் சரியானால் எதையும் நம்மால் சரி செய்துவிட முடியும், மீண்டெழுந்து புத்தம் புதிய ஒரு உலகத்தை உருவாக்க முடியும் என்று நம்ப வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த உணவு முறைகளை கடைபிடிப்பதுடன், தினசரி மூச்சுப் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் சீராக்கும். எதுவும் நிரந்தரம் அல்ல, என்ற மன உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் நமக்குத்தான், கேன்சருக்கு அல்ல. .