37. ரத்தசோகையும் ஹோமியோ மருந்துகளும்!

பெரும்பாலான இந்திய மக்களின் பிரதான நோய் ரத்தசோகை. வறுமை,
37. ரத்தசோகையும் ஹோமியோ மருந்துகளும்!

பெரும்பாலான இந்திய மக்களின் பிரதான நோய் ரத்தசோகை. வறுமை, அறியாமையின் விளைவாக ஏற்படும் இந்நோயைத் தீர்க்க அரசுகளோ, அந்திய நாட்டு மருந்து நிறுவனங்களோ அதிகக் கவலை கொள்வதில்லை. AIDS போன்ற மிகக் குறைந்த என்ணிக்கையிலான நோய் பாதிப்புகளுக்கு அமெரிக்க வள்ளல்களும், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளும் செலுத்தும் அக்கறை, ஆராய்ச்சிகளை ஏழை மக்களின் ரத்த சோகையை நீக்க முன் வருவதில்லை.

ரத்தசோகை என்றால் என்ன?

ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கவேண்டும். சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தின் ஆக்சிஜனைக் கடத்த உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் ANEMIA எனப்படும் ரத்தசோகை ஏற்படும். ஊட்டச்சத்துமிக்க குறிப்பாக இரும்புச் சத்துமிக்க உணவுகளே சாப்பிட முடியாத காரணத்தால் பெரும்பாலான இந்திய மக்களிடையே ரத்தசோகை காணப்படுகிறது.

ரத்தத்தில் (Red Blood Cells) சிவப்பு அணுக்கள், (White Blood Cells) வெள்ளை அணுக்கள் (Platelets) பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டுக்கள் மற்றும் திரவ வடிவில் உள்ள பிளாஸ்மா ஆகியவை உள்ளன. எலும்புகளிலுள்ள மஜ்ஜையில் தான் (Bone Maroow) சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்றன. மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்ய ஹீமோகுளோபின் உதவுகின்றன. ரத்த சிவப்பணுக்கள் 120 நாட்கள் வரை தான் உயிர் வாழ்கின்றன. ஹீமோகுளோபின் 90 சதவிகிதம் வரை இருப்பது அவசியம். இந்த அளவு குறையும் போது சிவப்பணு உற்பத்தி குறைகிறது. ரத்தசோகை ஏற்படுகிறது. (ஹீமோகுளோபினிலுள்ள குளோபின் புரோட்டீனாகவும், ஹீம் இரும்புச் சத்தாகவும் மாறி மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உருவாக்க உதவக் கூடியவை).

இது மட்டுமின்றி சிவப்பணுக்கள் வேகமாக அழிவது, சில காரணங்களால் ரத்த இழப்பு, ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்ற காரணங்களாலும் ரத்த சோகை ஏற்படுகிறது.

ரத்தசோகையின் அறிகுறிகள் என்ன?

உடற்சோர்வு, எளிதில் களைப்படைதல், முகம் வெளிறிப்போதல், தலைசுற்றல், படபடப்பு, மூச்சு கடினம், வாய்ப்புண், நாக்கு அழற்சி, பசியின்மை, காது இரைச்சல், வாந்தி, மயக்கம், மாதவிடாய் அதிகப் போக்கு ஒழுங்கற்ற தன்மை, மண்ணீரல் பெருத்தல், நகங்களில் குழி விழுதல், இதயத்தில் மாறுபட்ட ஒலித்துடிப்பு, தொண்டை மற்றும் இரைப்பை சளிச் சவ்வுகள் சிறுத்தல், உடல் வெளிர் நிறமாதல்.

ரத்தசோகையின் வகைகள் என்ன?

பலவகை ரத்த சோகைகள் உள்ளன. ஏபிளாஸ்டிக் ரத்தசோகை, பண்டிஸ் நோய், கூலிஸ் ரத்தசோகை, ஹீமோலைடிக் ரத்தசோகை, இரும்புச்சத்துக் குறைவால் ரத்தசோகை, சிக்கிள் செல் ரத்தசோகை.

ரத்தசோகை வராமல் தடுக்க, வந்தபின் தீர்க்க, உதவும் உணவுகள் எவை?

முருங்கைக்கீரை, புதினா கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, அகத்திக்கீரை, பொன்னங்கண்ணிக் கீரை போன்ற இரும்புச் சத்து நிறைந்துள்ள கீரை வகைகளை அன்றாட உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

பப்பாளி, திராட்சை, சப்போட்டா, ஆப்பிள், மாம்பழம், பேரிச்சை, உலர் திராட்சை, அத்திப்பழம், நெல்லிக்கனி போன்ற பழவகைகளும் உண்ண வேண்டும்.

பீட்ரூட்டில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனைச் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கிறது. அத்துடன் வைட்டமின் சி அடங்கியுள்ள காய்கனிகளையும் சேர்த்துக் கொண்டால் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.

பாதாம், உருளைக்கிழங்கு, இறைச்சி வகைகளிலும் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இரும்புச் சத்தில் இரண்டு வகை உள்ளன. ஹீம் அயன் மற்றும் ஹீம் அல்லாத அயன். இவற்றில் ஹீம் அயன் தான் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. மாமிச இறைச்சியில் தான் ஹீம் அயன் அதிகமுள்ளது. தாவர உணவுகளில் ஹீம் அல்லாத அயன் அதிகம் காணப்படுகிறது. மேலும் ஹீம் அல்லாத அயன் குடற்பகுதியில் எளிதில் உறிஞ்சப்படுவதில்லை.

மாமிச இறைச்சியால் பாதிப்பு ஏற்படுமென கருதினால் மாற்று அசைவ உணவுகளான கோழி, மீன் இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுகளிலுள்ள அயன் சத்தை உறிஞ்சுவது இறைச்சியிலுள்ள (Animal Protein Factor) விலங்கு புரதக் காரணியே. இது இறைச்சி, கோழி, மீன் முதலியவற்றில் மட்டும் தான் உள்ளது. விலங்குப் பொருட்களான பால், பாலாடைக் கட்டிகளில் இந்தப் புரதக் காரணி இல்லை. மேலும் இவை அயன்சத்து உறிஞ்சுவதையும் தடுக்கின்றன. பால் உணவிலுள்ள கால்சியமும் பாஸ்போட்டும் அயன்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கும்.

இரும்புச் சத்து மற்றும் கால்சியம் சத்துச் செறிவுள்ள உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. அதாவது அசைவம் உண்ணும்போது பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அவரை, மொச்சை, பட்டாணி வகைகளில் அயன் அதிகம் உள்ளது. இவற்றுடன் இறைச்சி வகைகள் உட்கொண்டால் அதிகளவு உறிஞ்சுதல் நிகழும்.

காபி மற்றும் டீயில் டேனின் எனும் சக்கைப் பொருள் அயன்சத்து உறிஞ்சுவதைத் தடை செய்வதால் அவற்றை மிகவும் குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்தி விடுதல் நல்லது.

கடுமையான ரத்த சோகையில் உடலின் ஒரு சில இடங்களில் நீர்வீக்கம் (Oedema) ஏற்படுகிறது. அடிக்கடி வாய்ப்புண்களும் வருகின்றன. ரத்த சோகையால் ஏற்படும் குறிகள் நபருக்கு நபர் மாறுபடும். அவரவர் குறிகளுக்கேற்ப ஹோமியோ மருந்து சாப்பிட்டால் ரத்த சோகை முற்றிலும் குணமாகும்.

கீழ்க்கண்ட சில மருந்துகள் ரத்தசோகைக் குறிகளுக்கு அடிக்கடி பயன்படக் கூடியவை.

பெர்ரம்மெட் – அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்பாடு காரணமாக ரத்தசோகை, அதிக பசி, சாப்பிடும்போது வாந்தி, முகம் வெளுத்திருத்தல், அடிக்கடி தலைவலி, கை, கால்களில் சிறிது வீக்கம், காய்ச்சல்களுக்குப் பின்னர் ஏற்படும் ரத்தசோகைக்கும் உதவும்.

சைனா – உடலின் திரவச் சத்துக்கள் அதிகளவு வெளியேறியதால் ஏற்பட்ட கடும் சோர்வும், சோகையும், காது இரைச்சல் மற்றும் தலைவலியுடன் கடும் பலவீனம், குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகளவு பாலூட்டுவதால் வரும் சோகை.

நேட்ரம்மூர் – நன்றாகச் சாப்பிட்டாலும் மெலிவு, எடை இழப்பு ஏற்படுதல், கன்னங்கள், கழுத்து மெலிந்து காணப்படுதல், உடல் நிறம் குறைந்துவிடுதல், மாதவிலக்கு தாமதித்தல், குறைவாக இருத்தல், அல்லது விட்டு விட்டு வருதல் (ஒழுங்கற்ற மாதவிலக்கு).

ஆண்களுக்கு விந்து இழப்பு, மலச்சிக்கல், மலேரியா காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் சோகை, ஆழ்ந்த துயரம், அதிக உப்பான பண்டங்கள் மற்றும் ஊறுகாய் விருப்பம்.

பாஸ்பரஸ் – நீண்ட கால மனக்கவலை காரணமாக சோகை, முகம் வெளுத்து வீக்கம், கண்களைச் சுற்றிலும் மற்றும் முகம் முழுவதும் வீக்கம்.

ஹெலோனியஸ் – அதிகளவு மாதப்போக்கு காரணமாக ஏற்படும் ரத்தசோகையும் பலவீனமும்.

சிலிகா – குழந்தைகளின் ரத்தசோகை – குழந்தைகளுக்குச் சரியான எலும்புகள் வளர்ச்சியின்மை (ரிக்கட்ஸ்)

கல்கேரியா பாஸ் – சதைப்பிடிப்பில்லாத ஒல்லியான, வளர்ந்த குழந்தைகளின் பலவீனம், சோகை

அலுமினா – பருவப்பெண்களின் சோகை, முந்திய விடாய், குறைந்த ரத்தப்போக்கு, ஜீரணமாகாத பொருட்கள் சாப்பிட விருப்பம்.

ஆர்சனிகம் ஆல்பம் – ரத்தசோகையால் ஆபத்தான நிலை அடைதல் (PERNICIOUS ANAEMIA), உடல்வீக்கம், அதிகளவு களைப்பு, பலவீனம், மெலிவு, மலேரியா மற்றும் விஷ சுரங்களால் ஏற்பட்ட சோகை, தாகம்.

லெசித்தின், ரூபியா / டிங்க்டோரம் இரிடியம் – ரத்தசோகையை அகற்றி ரத்த விருத்தி ஏற்பட பொதுவாகப் பயன்படுத்தும் மருந்துகள்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் - 9443145700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com