ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இந்தியர்கள் 4 பேருக்கு நிதி உதவி அளித்ததாக அரபு நாடுகளுள் ஒன்றான குவைத்தில் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம், பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் மஜீத். அவர் தன்னுடைய 3 நண்பர்களுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்.
பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம், மும்பை திரும்பிய ஆரிப், தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலில் உள்ளார். பல்வேறு வழக்குகளுக்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் ஆரிப் கூறுகையில், "கடந்த 2014-இல் இராக்கில் இருந்து சிரியா செல்வதற்காக நானும், எனது 3 நண்பர்களும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நிர்வாகியிடம் பணம் கேட்டோம்.
இதைத் தொடர்ந்து, குவைத்தைச் சேர்ந்த அப்துல்லா ஹாடி அப்துல் ரெஹ்மான் அல் எனேசி என்பவரிடம் இருந்து எங்களுக்கு பணம் அனுப்பப்பட்டது' என்றார்.
அல் எனேசி குறித்து குவைத்தில் உள்ள புலனாய்வு அமைப்புக்கு என்ஐஏ மூலம் ரகசியத் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை தீவிரமாக கண்காணித்த குவைத் புலனாய்வு அமைப்பினர் அவரை கைது செய்தனர். அவரது கைது குறித்து என்ஐஏ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அல் எனேசியிடம் விசாரணை நடத்துவதற்காக என்ஐஏ அதிகாரிகள் குவைத் செல்லலாம் என்று தெரிகிறது.