ஆந்திரத்தில் இலவச செல்லிடப்பேசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது குறித்து வங்கி அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறியதாவது:
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் ஏழை, எளிய மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேரிடம் வங்கிக் கணக்கு உள்ளது. 20 சதவீதம் பேர் ரூபே அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். அதனால், மாநில அரசு மஞ்சள் குங்குமம் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கும் 3,000 ரூபாயை ரூபே அட்டைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், பொதுமக்களிடம் வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கி மொபைல் ஆப் சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 5 லட்சம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை ஊக்குவிக்க வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.