தங்கள் கணக்கில் செலுத்தப்பட்ட கருப்புப் பணத்தை அப்படியே வைத்திருங்கள் என்று ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை அப்படியே வைத்திருங்கள் என்று வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆலோசனைகளை கூறினார். இதன்மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்தகைய கூற்று அவமானகரமானதும், அதிர்ச்சி தரக்கூடியதும் ஆகும்.
பெருமதிப்பு ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான பிறகு, 76 சதவீத ஜன்தன் கணக்குகளில் மொத்தம் ரூ.75ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அந்த வங்கிக் கணக்குகளில் ரூ.5-க்கும் குறைவாகவே இருந்தது.
நாட்டில் மொத்தம் 22.5 கோடி ஜன்தன் கணக்குகள் உள்ளன.
எஞ்சியுள்ள 24 சதவீத ஜன்தன் கணக்குகளில் ரூ.5-க்கும் குறைவான தொகையே தற்போதும் நீடிக்கிறது.
சட்டவிரோதமாக பணம் செலுத்துவதை பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார் என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.