"மத்தியில் கடந்த 10 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தபோது கருப்புப் பணத்துக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்தீர்களா?'' என்று காங்கிரஸ் கட்சிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து வியாழக்கிழமை இக்கேள்வியை அவர் எழுப்பினார். மக்களவையில் விவாதம் ஒன்றின் நடுவே, அவர் மேலும் பேசியதாவது:
இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஏதாவது ஒன்றையாவது அவர்கள் கூற முடியுமா?
கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து வங்கிகளில் செலுத்துவதற்கு, வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வங்கிகளில் செலுத்தப்படும் தொகைக்கு 50 சதவீதம் வரியும், அபராதமும் விதிக்கப்படும். இதை, கருப்புப் பணம் வைத்திருப்போர், அதை சட்டப்பூர்வ பணமாக மாற்றுவதற்கு மத்திய அரசு கூடுதல் வாய்ப்பை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அவர்களது குற்றச்சாட்டு தவறானது.
உண்மையில், கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து வங்கிகளில் செலுத்தும்போது 50 சதவீத வரி விதிக்கப்படும். எஞ்சியிருக்கும் தொகையில் பாதியை வங்கியில் இருந்து 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு விதிக்கப்படும் வரி 65 சதவீதமாக இருக்கும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், உலக அளவில் ஸ்திரமற்ற பொருளாதார நிலை நிலவும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இயல்புநிலை திரும்பி விடும் என்றார் அவர்.