பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலானது, பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி தனது இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் மேற்கொண்ட பொறுப்பான நடவடிக்கை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சஹர் நகரில் செய்தியாளர்களை ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நமது ராணுவத்தினருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பிரதமர் எப்போது பிரதமராக செயல்படுகிறாரோ அப்போது நான் அவரை ஆதரிப்பேன். அந்த வகையில், தற்போது மோடி மேற்கொண்ட நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவும் உண்டு.
நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுபோன்ற நடவடிக்கைதான் என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அம்மாநிலத்தில் பிடிபி கட்சியுடன் மோடி மேற்கொண்ட குறுகிய பார்வையுடன் கூடிய அரசியல் கூட்டணியே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.