அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்றும், நோபல் பரிசு வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர், ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
இங்கு நிறுவப்பட்டுள்ள நவீன முறையிலான பாரம்பரிய மூலிகை உற்பத்திப் பிரிவு, இந்தக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும். பொதுத் துறையில் இத்தகைய தேசிய மருத்துவ உற்பத்திப் பிரிவு தொடங்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்றார் ஹர்ஷவர்த்தன். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.