முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டி மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள விநாயகர், ஆஞ்சநேயருக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளிக் கவசங்களை அதிமுகவினர் வெள்ளிக்கிழமை காணிக்கையாக செலுத்தினர்.
இதுதவிர, முதல்வர் உடல்நலம் பெற வேண்டி அந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
ஜெயலலிதா கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவராவார்.
தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு ஜெயலலிதா வந்து சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து,4,710 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கவசத்தையும், 15 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட கவசத்தையும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அதிமுகவினர் காணிக்கையாக செலுத்தினர்.