மகாராஷ்டிர முதல்வர் மீது காங்கிரஸ் கடும் தாக்கு
"ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்பட விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுதற்குப் பதிலாக இடைத்தரகர் போலச் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸூம் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஃபட்னவீஸ், படத்தை சுமுகமாக வெளியிடும் முயற்சியாகவே தயாரிப்பாளர் தரப்புக்கும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக்கும் இடையே சமரசப் பேச்சு நடத்தியதாக் கூறியுள்ளார்.
ரண்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில், கரண் ஜோஹர் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் "ஏ தில் ஹை முஷ்கில்'. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபவாத் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால், இத்திரைப்படத்தை வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படும் எந்தப் படத்தையும் இந்தியாவுக்குள் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீûஸ மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கரண் ஜோஹரும், ராஜ் தாக்கரேவும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியை ஃபட்னவீஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்களின் சேம நல நிதிக்கு ரூ.5 கோடி வழங்குவதாக கரண் ஜோஹர் உறுதியளித்தார். மேலும், பாகிஸ்தான் கலைஞர்களை இந்தியப் படங்களில் இனி நடிக்க வைக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்ததாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கையை காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம் விமர்சித்துள்ளன. மாநில முதல்வர் என்பவர் பிரச்னை எழும்போது சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டுமே தவிர, இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்யும் தரகு வேலை பார்க்கக் கூடாது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தான் கலைஞர்களை இந்திய திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் அதில், மாநில அரசுகள் தலையிட முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள ஃபட்னவீஸ், "ராணுவத்தினர் நலனுக்கு நிதியுதவி வழங்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்; பாதுகாப்புப் படையினரின் தியாகத்தைப் போற்றுவதில் இருதரப்புக்கும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது. திரைப்படத்தை சுமுகமாக வெளியிடுவது தொடர்பான சமரச நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டேன்; அது தவறல்ல' என்றார்.