கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
செருவஞ்சேரியைச் சேர்ந்தவர் அசோகன். பஞ்சாயத்துத் தலைவராக உள்ள அவர், கடந்த ஆண்டு நிகழ்ந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மதியம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த ரஞ்சித் காயமடைந்தார். வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக புகாரின்பேரில் பாஜகவைச் சேர்ந்த சிலரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.