அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் பேரம் பேசியதாக ரகசிய விடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
ஹரீஷ் ராவத் தலைமையிலான உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏ-க்கள் 9 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்பட்டனர். இதனால், மாநிலப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
இந்தச் சூழலில் அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் ஹரீஷ் ராவத் பேரம் பேசுவது போன்ற காட்சிகள் அடங்கிய ரகசிய விடியோ வெளியானது. அது, அந்த மாநில அரசியல் அரங்கில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹரீஷ் ராவத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்ட
தாவது:
ரகசிய விடியோ விவகாரத்தில் இன்னும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யாத ஒரு குற்றச்சாட்டுக்கு சிபிஐ விசாரணை நடத்த முடியாது.
மேலும், இதுபோன்ற தகுதியற்ற புகார்களுக்கு அத்தகைய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையில்லை. கடந்த காலங்களில் வெளியான சில ரகசிய விடியோ விவகாரங்களில் சிபிஐ விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், ஹரீஷ் ராவத் விவகாரத்தில் அதற்கு அவசியமில்லை என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.