கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடற்கரை பகுதியில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி நாட்டு மாலுமிகளிருவரும் தாய் நாட்டிலே தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு என்ற 2 இந்திய மீனவர்களை அம்பலப்புழா கடல் பகுதியில் வைத்து சுட்டுக்கொன்றனர்.
இந்த வழக்கில் இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமிலனோ லத்தோர், சால்வடோர் கிரோனி ஆகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வீரர்களில் உடல் நலக்கோளாறு காரணமாக சால்வடோர் கிரோனி ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். பின்னர், லத்தோருக்கும் ஜாமீன் கிடைத்து இத்தாலி சென்றார்.
நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது லத்தோர் தாய்நாட்டிலேயே தங்கியிருக்க ஆட்சேபனை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள இத்தாலி மாலுமிகள் இருவரும் தாய் நாட்டிலே தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தாய் நாட்டில் அவர்கள் இருவரும் தங்கிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.