புது தில்லி: இந்திய எல்லைக்கு அருகே இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துவிட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்தார்.
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகளை அனுமதிக்கக் ககூடாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் வலியுறுத்தலை பாகிஸ்தான் புறக்கணித்து வருகிறது.
இந்திய எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதன் ஆரம்பமே இந்த அதிரடி தாக்குதல் என்றும், நேற்று இரவு தொடங்கிய தாக்குதல், இன்று அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றதாகவும் கூறினார்.
இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உதவியவர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம். பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்று ஜெனரல் ரன்பீர் சிங் கூறினார்.
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து 500 மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.