காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், பள்ளத்தாக்கின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பிக்கவில்லை.
காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு கடந்த 83 நாள்களாக பதற்றம் நிலவி வந்தது.
இதனால் அசாதாரணச் சூழல் ஏற்படும்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதும், இயல்பு நிலை திரும்பும்போது உத்தரவை வாபஸ் பெறுவதும் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் வியாழக்கிழமை எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனால் ஊரடங்கு உத்தரவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிவினைவாதிகள் வியாழக்கிழமை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததால் காஷ்மீரில் 83-ஆவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டத்தை வரும் 6-ஆம் தேதி வரை
நீட்டித்துள்ளன.