கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதல் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.
வாராணசியில் கடந்த மாதம் 2-ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். சுஷ்மாவைத் தவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து உரையாடினார்.
இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பயங்கரவாத நிலைகள் மீது துல்லியமான தாக்குதல் நிகழ்த்தியுள்ளதன் மூலம், பாகிஸ்தானுக்கு ஆணித்தரமான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குல்கள் நடைபெறுவதற்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.