சட்ட விரோத தொலைபேசி இணைப்பக வழக்கு மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியதால் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் நெட்வொர்க் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் சென்னை 14-ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-2007 காலகட்டத்தில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட இணைப்பகம் (எக்சேஞ்ச்) நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல்லுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவன முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கௌதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது தில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கௌதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.
இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு தில்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சென்னை சிபிஐ 14-ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைப் பெற, ஏப்ரல் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி விடுமுறை தினம் என்பதால், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை நகல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து சிபிஐ தரப்பில் விரைவில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் விசாரணையை மே 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டார்.