புது தில்லி: இந்தியாவில் கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஏராளமானோர் ரசிகராக இருக்கிறார்கள். ஆனால், இந்த திட்டத்தால் ஒரு இளைஞருக்கு ரசிகராகியுள்ளார் பிரதமர் மோடி.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின், தனது சகோதரியின் திருமண அழைப்பிதழை டிவிட்டரில் பதிவு செய்தார். அந்த திருமண அழைப்பிதழின் முகப்பில் மணமக்கள் பெயருக்கு பக்கத்தில் 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கான லோகோ இடம்பெற்றிருந்தது.
இந்த திட்டத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அடுத்த 48 மணி நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. அவரது டிவிட்டர் பதிவை ஏராளமான பாஜகவினர் ரீ-டிவீட் செய்திருந்தார்கள். இறுதியில், அது மோடியின் கண்களில் பட்டுவிட்டது. மோடி அந்த பக்கத்தை ரீ-டிவீட் செய்ய, ஆகாஷ் ஜெயினை தொடருவோர் பட்டியலில் மோடியின் பெயர் இணைந்தது.
சுமார் 2 கோடியே 87 லட்சத்து 34,385 பேர் பின் தொடருவோர் என்ற நீண்ட பட்டியலைக் கொண்டிருக்கும் மோடி டிவிட்டர் பக்கம், வெறும் 1,698 பேரை மட்டுமே தொடருகிறது. இந்த மிக முக்கியமானவர்கள் பட்டியலில் ஆகாஷ் ஜெயினும் இணைந்துவிட்டார்.
2014ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை முன்னிட்டு, தில்லியின் முக்கியச் சாலைகளை அவர் துடைப்பான் கொண்டு பெருக்கி சுத்தம் செய்த காட்சிகளும் அன்றைய நாளிதழ்களில் முதல் இடத்தைப் பிடித்தன.