சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவரின் மரணம் குறித்த செய்தியை தொலைக்காட்சியில் அவசர செய்தியாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் துணிச்சலாக வாசித்துள்ளார்.
ஐபிசி-24 என்னும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் அவரின் பெயர் சுப்ரீத் கௌர் ஆகும். அந்த தொலைக்காட்சியில் சனிக்கிழமை காலையில் அவர் செய்தி வாசித்தபோது, மகசமுந்த் மாவட்டத்தில் நேரிட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி குறித்து உள்ளூர் நிருபர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
அப்போது அந்த கார் தனது கணவர் ஹர்சத் கவ்டா சென்ற கார்தான் என்பதையும், உயிரிழந்த 3 பேரில் தனது கணவரும் ஒருவர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். எனினும், நிருபரின் தொலைபேசி பேட்டியை முழுவதும் எடுத்ததுடன், செய்தியையும் முழுவதும் வாசித்து நிறைவு செய்தார்.
செய்தி வாசித்து முடித்ததும் வெளியே வந்த அவர், அந்த விபத்தில் இறந்தது தனது கணவர்தான் என்பதை பிறரிடம் தெரிவித்தார். அப்போதுதான் தனது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் கதறி அழுதார்.
அந்த தொலைக்காட்சியில் 8 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக கௌர் பணிபுரிகிறார்.
முதல்வர் பாராட்டு: இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் முதல்வர் ரமண் சிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும், கணவரின் மரணம் குறித்த செய்தியை துணிச்சலுடன் வாசித்த கௌருக்கும் தனது பாராட்டை தெரிவித்தார்.