நாடு முழுவதும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அதேநேரத்தில், விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்கு மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்தப்பட்சமாக 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை வேளாண் மற்றும் கூட்டுறவு கடன், விவசாயிகள் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கடன் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரையிலும் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
தேசிய பேரிடர்கள் ஏற்படும்போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை அளிக்கும்படி கடன் அளிக்கும் அமைப்புகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று அந்த பதிலில் சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பினாமி சொத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் சந்தோஷ் குமார் கங்க்வார் தனது பதிலை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதிய பினாமி சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்பிறகு, ஏராளமான பினாமி புழக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.200 கோடி மதிப்பு பினாமி சொத்துகள் தொடர்பான 140 வழக்குகளில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, 124 வழக்குகளில் பினாமி சொத்துகள் என்று அடையாளம் காணப்பட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், வங்கி கணக்குகள், அசையா சொத்துகள் ஆகியவையும் அடங்கும் என்று சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்துள்ளார்.