தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறை அடிப்படையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், 'மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவது என்பது பிற்போக்கான செயல்' என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறுகையில், 'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல அது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற நிலைப்பாட்டில் கட்சி ஒற்றுமையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரும் திருப்தியடையும் வகையில், தேர்தல் ஆணையம் தீர்வு காண வேண்டியது அவசியம்' என்றார்.