தன்னை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் ஓடி வந்த 4 வயது சிறுமிக்காக பிரதமர் மோடி தனது காரை நிறுத்தி அச்சிறுமியுடன் உரையாடினார்.
குஜராத்தில் இருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சூரத்தில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ அவரது கார் சென்றபோது, சாலையில் இரு பகுதியிலும் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, ஒரு சிறுமி மோடியைப் பார்க்கும் ஆர்வத்தில் அவரது காரை நோக்கி ஓடி வந்தார். பாதுகாப்புப் படையினர் அச்சிறுமியைத் தடுத்து நிறுத்தினர்.
காரில் இருந்தபடி இதனைக் கவனித்த மோடி, உடனடியாக காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினார். பிறகு வெளியில் நின்றிருந்த பாதுகாப்புப் படை வீரரை அழைத்து அந்தச் சிறுமியை அழைத்து வரக் கூறினார். பாதுகாப்புப் படையினர், அச்சிறுமியை காருக்குள் அனுமதித்தனர். சிறுமியுடன் சிறிது நேரம் உரையாடிய மோடி, அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது, கூடியிருந்த மக்கள் மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிட்டு, சிறுமிக்காக மோடி திடீரென காரை நிறுத்தியது வியப்பை ஏற்படுத்தியது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மோடி, பாதுகாப்பு நடைமுறைகளை தவிர்த்துள்ளார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தில்லி விமான நிலையத்துக்குச் சென்று மோடி வரவேற்றார். இத்தகைய தருணங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். ஆனால், மோடி திடீரென விமான நிலையத்துக்கு பயணித்ததால், அப்போது எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.