சென்னை: பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்றும், அத்துடன் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கக் கூடாது என்றும், வாடிக்கைகையாளர்கள் பெட்ரோல் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார்கள் வந்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.