ஜூலையில் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புக் கொள்முதல் ஒப்பந்தங்கள்
ஜூலையில் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிடமிருந்து மிக அதிக அளவில் பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்து வரும் நாடு இந்தியா. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் முதலானவற்றை இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கி வருகிறது.
இந்தச் சூழலில், வரும் ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன்மூலம், அந்த நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறவிருக்கிறார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், மோடி அந்த நாட்டுக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
மோடியின் இஸ்ரேல் சுற்றுப் பயணத்தின்போது, பிரம்மாண்டமான பாதுகாப்புக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, இந்தியாவுக்கு பல நவீன கருவிகளையும், ஆயுதங்களையும் இஸ்ரேல் விற்பனை செய்து வரும் நிலையில், நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேலின் அதி நவீன "பாரக்-8' வான் பாதுகாப்பு ஏவுகணைத் தொழில்நுட்பச் சாதனத்தை இந்திய கடற்படைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது கையெழுத்தாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்திய ராணுவப் பயன்பாடுக்காக பீரங்கி வண்டிகளை தாக்கி அழிக்கும் அதி நவீன "ஸ்பைக்' ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தமும், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது கையெழுத்தாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் சுற்றுப் பயணம், இந்திய - இஸ்ரேல் நட்புறவில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். 
இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவு, வெறும் ராணுவ தளவாடங்களை வாங்குவது, விற்பனை செய்வதோடு முடிவடையப் போவதில்லை.
பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளிலும், இரு நாடுகளும் இணைந்து ஈடுபடும்.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே இந்தியாவும், இஸ்ரேலும் நட்பு பாராட்டி வருகின்றன. எனினும், அவரது ஆட்சியில்தான் அந்த நட்பு வெளிப்படையாக உணரும் வகையில் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com