உத்தரப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 84 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றபிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பொதுமக்கள் பாதுகாப்புத் துறை செயலர் மனோஜ் மிஸ்ரா, கலாசாரத் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; வருவாய்த் துறை செயலர் கரண் சிங் சௌஹான், ஜான்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில், லக்னௌ ஆட்சியர் ஜிஎஸ் பிரியாதர்ஷி, கான்பூர் ஆட்சியர் கௌசல்ராஜ் சர்மா, பைரேலி ஆட்சியர் சுரேந்திர சிங், விவசாயத் துறை சிறப்பு செயலர் பிங்கி ஜோவல், காஜியாபாத் ஆட்சியர் நிதி கேசர்வானி, கௌதம புத்தநகர் ஆட்சியர் நாகேந்திர பிரசாத் சிங் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இதுதவிர, இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில், காஜியாபாத் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் குமார், ஷாஜஹான்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் லவ குமார், காஜிபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர துபே உள்ளிட்டோர் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. பாஜக மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத், அந்த மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முந்தைய சமாஜவாதி அரசால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், முக்கிய நியமனங்களை யோகி ஆதித்யநாத் அரசு மறுஆய்வு செய்து வருகிறது. அதன் ஒருநடவடிக்கையாகவே, இந்த மிகப்பெரிய இடமாற்ற நடவடிக்கை பார்க்கப்படுகிறது.