புதிய ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.10 நாணயம் வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவரவுள்ளது.
சிறப்பு மிக்க நிகழ்வுகளைப் போற்றும் விதமாக, அவை தொடர்பான உருவங்கள் பொறித்த புதிய நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் விரைவில் வெளியாகவுள்ள புதிய ரூ.10 நாணயத்தில் தேசிய ஆவணக் காப்பகக் கட்டடத்தின் உருவம் இடம்பெற்றிருக்கும். அதனுடன் 125 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்ட இலச்சனையும் பொறிக்கப்பட்டிருக்கும். புதிய ரூ.5 நாணயத்தைப் பொருத்தவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உருவமும், 1866-2016 (150 ஆண்டுகள்) என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.