உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில பேரவைத் தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததைப் போலவே, ஹிமாசலப் பிரதேசத்திலும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநில மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில், வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக கட்சிக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
ஹிமாசலப் பிரதேச மாநிலம், ஊழலற்ற, நேர்மையான ஒரு புதிய சகாப்தத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதற்கு முன்பெல்லாம், இந்த மாநிலத்தில் பனிப் பொழிவு ஏற்பட்ட பிறகுதான் பிற மாநிலங்களில் குளிர் அலை பரவும்.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி ஆகிய மாநிலங்களில் வீசிய அலை (அந்த மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றிகள்) ஹிமாசலப் பிரதேசத்தை வந்தடைந்துள்ளது.
அந்த மாநிலங்களில் ஊழலை அகற்றுவதற்காக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள்.
அதைப் போலவே, ஹிமாசலப் பிரதேச மக்களும் பாஜகவுக்கு வாக்களித்து, என்னுடன் கைகோத்து ஊழலற்ற பாதையில் மாநிலத்தை வழிநடத்த வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வழக்குரைஞர்களுடன் இவ்வளவு அதிக நேரம் செலவிடும் ஒரு முதல்வரை (ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்) வேறு எந்த மாநிலத்திலும் நான் பார்த்ததில்லை என்றார்மோடி.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையின் ஆயுள்காலம் வரும் ஜனவரி மாதம் 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.