இதுவரையில் 11 லட்சத்துக்கும் மேலான போலி பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்துப் பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதிமீறப்பட்டுள்ளது. எனவே போலி பான் எண்களை தேடும் பணி உடனடியாக நடைபெற்றது.
தற்சமயம் ஜூலை 27-ந் தேதி வரை 11 லட்சத்து 44 ஆயிரத்து 211 போலி பான் எண்கள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுபோல ஆளில்லாதவர்களின் பெயரில் இதுவரை 1,566 போலி பான் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவைகள் போலி பெயர் மற்றும் அடையாளச் சான்று கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டதாகும் என்று தெரிவித்தார்.