துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து நாட்டின் 13-ஆவது துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், நாயுடுவுடன் பாஜக அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
13-ஆவது துணைக் குடியரசுத் தலைவராக வெற்றிபெற்ற வெங்கய்ய நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மதிப்பு உயரும் வகையில் சிறப்பான முறையில் வெங்கய்ய நாயுடு செயல்படுவார் என நம்புகிறேன்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்போதுமே அவர் துணை நிற்பார். இதுபோன்ற சிறந்த சிந்தனைகளையும், கொள்கைகளும் உள்ள ஒருவர் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.