வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான அன்சருல்லா பாங்க்லா குழுவைச் சேர்ந்த அப்துல்லா இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முஸாஃபர் நகரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டான்.
2011-ம் ஆண்டு முதல் சஹாரன்பூரில் வசித்து வந்த அப்துல்லா, கடந்த ஒரு மாதமாக முஸாஃபர் நகரில் தங்கியுள்ளான். இங்கிருந்து பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். குறிப்பாக இதர தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, போலி அடையாளங்களை உருவாக்குவது போன்ற செயல்களைச் செய்துள்ளான்.
வங்கதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தீவிரவாதிகளுக்கு போலி அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை அளித்து இந்தியாவில் பாதுகாப்புடன் இருப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளான்.
இதன்மூலம் தீவிரவாதச் செயல்களுக்கு எந்த விதத்திலும் சிக்கல் ஏற்படாமல் இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அப்துல்லாவுடன் மேலும் 3 பேரைப் பிடித்து உத்திரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், சஹாரன்பூர், முஸாஃபர் நகர் மற்றும் ஷாமிலி நகர காவலர்களுடன் இணைந்து அந்த மாவடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.