அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரை முதல்வராக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதிப் ராய் பர்மன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்கு அளித்ததால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்களும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜகவில் முறைப்படி இணைந்தனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மாணிக் சர்க்கார் அரசை அகற்ற முழுமுயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.