லக்னோ: ராகுல் காந்தியை காணவில்லை என்று அவரது அமோதி தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. அவர், அவரது தொகுதியை ஆறு மாதங்களாக பார்வையிடவில்லை. இதனால் வாக்காளர்களிடையே கோபமும் ஏமாற்றமும் அடைந்தனர்.
சுவரொட்டியில் ராகுல் அவரது நடத்தை மூலம் அவரது வாக்காளர்களை அவமதித்திருக்கிறார் என்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், மக்களவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளைத் தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன
இந்நிலையில், அவரை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியினர் சில மணிநேரங்களிலேயே கிழித்தெறிந்தனர்.
இவ்வாறு போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு பாஜகவே காரணம். அவர்கள் காங்கிரஸ் கட்சியை உத்திர பிரதேசத்தில் இருந்து அகற்றப் பார்க்கின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சியினரை அகற்ற பார்க்கும் பாஜக முயற்சி நிச்சயம் தோல்வி அடையும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
இதனால் ராகுல் காந்தி விரைவில் அமேதிக்கு வருகை தர வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.