கடந்த நிதியாண்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை மூலம் கணக்கில் காட்டாமல் ரூ.13,715 கோடி மறைக்கப்பட்டதை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதில்:
கடந்த நிதியாண்டில் (2016-17) 1,152 நிறுவனங்களின் 5,102 அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.15,496 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட நிறுவனங்கள், கணக்கைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரின.
அதே காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 12,526 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.13,715 கோடி கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை மொத்தம் 1.96 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) இந்த எண்ணிக்கை 1.63-ஆக இருந்தது என்று அந்த பதிலில் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் 18 லட்சம் பேர் வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. அத்துடன், 13.33 லட்சம் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.2.89 லட்சம் கோடி செலுத்தப்பட்டது தொடர்பான தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கங்வார் பதிலளித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.