புதுதில்லி: அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு வரும் நவம்பர் 28 துவங்கி மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தில்லியில் இயங்கி வரும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து 2017-ம் ஆண்டுக்கான உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாட்டை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி வாஷிங்டனில் அறிவித்தார்கள். அதன்படி, உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடக்கும் என்று அமெரிக்க அரசு உவகையுடன் அறிவிக்கிறது.
மகளிருக்கு முன்னுரிமை, எல்லோருக்கும் வளம், உலக வளர்ச்சிப் பாதையில் மகளிரின் முக்கியமான பங்களிப்பை முன்னிலைப்படுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் உரைப் பொருளாகும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க குழுவுக்கு அதிபரின் ஆலோசகர் இவான்கா டிரம்ப் தலைமையேற்கிறார்.
ஒருங்கிணைந்த பரிமாற்றம், வழிகாட்டல் மற்றும் பயிலரங்குகள் வாயிலாக உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு, வளரும் தொழில்முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்த மாநாடு அளிக்கிறது. இந்த ஆண்டு, மகளிர் தொழில்முனைவோர் மற்றும் அவர்களின் அபாரமான ஆற்றல் மாநாட்டில் மையப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக புதுதில்லியிலுள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் (பொறுப்பு) மேரிகே கால்சன் கூறியிருப்பதாவது:
“அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு என்பது கூடுதல் வர்த்தகம், கூடுதல் பயணம் மற்றும் மகத்தான இருதரப்பு மக்களுக்கிடை பிணைப்பு ஆகியவை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது. வாஷிங்டனில் ஜூன் மாதம் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அதிபர் டிரம்பும் பிரமதர் மோடியும் வலியுறுத்திய குறிக்கோள்கள் இவையே. இந்திய அரசும் பிரதமர் மோடியும் எங்களுக்கு சிறந்த கூட்டாளிகள். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலும் தொழில் துறையை ஊக்குவிக்கும் அரசுக் கொள்கையும் சேர்ந்து நவீன தொழில் தொடங்குவதற்கான உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக ஹைதராபாத் நகரை மாற்றியிருக்கிறது. அந்நகருக்கு எங்கள் நன்றி உரித்தானது. உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு சார்பில் நிதி ஆயோக் இந்த உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கன்ட், ஹைதராபாத் நகரில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு தெலுங்கான அரசின் ஆதரவை உறுதி செய்திருக்கிறார். இந்த மாநாட்டில் தனிச் சிறப்பான வாய்ப்பு தொழில்முனைவோர்களுக்கு காத்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.