புதுதில்லி: நாடு முழுவதும் குறைந்த அளவு மாணவ சேர்க்கை கொண்ட என்ஜினியரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகள், அவற்றினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி இயங்குகிறது.
தில்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் உலக கல்வி மாநாட்டில் ஏஐசிடிஇயின் சேர்மன் அனில் டி சகஸ்ரபுதே கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசும் பொழுது கூறியதாவது:
ஏஐசிடிஇ அனுமதி பெற்ற 10,361 என்ஜினியரிங் கல்லூரிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் 37 லட்சம் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் 27 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
எனவே நாடுமுழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக 30% இடங்கள் கூட நிரம்பாத கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தகுந்த தேவையின்மை மற்றும் கல்வியின் தரம் குறைவு காரணமாக நாடு முழுவதும் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக ஏஐசிடிஇ ஆய்வு செய்து வருகிறது.
மாணவர்களின் சேர்க்கை குறைவு காரணமாக சில என்ஜினியரிங் கல்லூரிகள் தாங்களாகவே மூட விருப்பம் தெரிவித்து உள்ளது. இத்தகைய என்ஜினியரிங் கல்வி நிறுவனங்களுக்கான அபராத தொகையினை நாங்கள் குறைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.