புது தில்லி: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டில் பணப்புழக்கம் ரூ.3.5 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
வங்கிகள் அல்லது ஆப்களின் மூலமாக நடைபெறும் ரொக்கமற்ற பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும், ஏழை மக்களும் கூட ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகைளை மேற்கொள்வதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் பிரிவில், பணமதிப்பிழப்பு விவகாரத்தால் முறைசாரா தொழில்கள் கண்ட பின்னடைவு, பின்பு சீரடைந்தது. அதே சமயம், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. ரொக்கப்புழக்கம் ரூ.3.5 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்துள்ளது. அதே சமயம் ஜிடிபி - பண விகிதாச்சாரம் தொடர்ந்து இப்படியே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேணடும்.
ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பிலுமே டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மேலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 25% ல் இருந்து 45% ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.