விருப்பப்படி சரத் யாதவ் முடிவெடுக்கலாம்: மோடி, அமித் ஷாவை சந்தித்த பிறகு நிதீஷ் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
விருப்பப்படி சரத் யாதவ் முடிவெடுக்கலாம்: மோடி, அமித் ஷாவை சந்தித்த பிறகு நிதீஷ் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரத் யாதவ் தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தார். பிகாரில் நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததால் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சரத் யாதவ் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், நிதீஷ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுடனான மகா கூட்டணியை ஜூலை 26-ம் தேதி முறித்துக் கொண்ட அந்த மாநில முதல்வர் நிதீஷ், அதைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்த நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிதீஷ் குமார் கூறியதாவது:
மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். இம்மாத இறுதியில் மீண்டும் தில்லி வர இருக்கிறேன். அப்போது, பிகார் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச இருக்கிறேன் என்றார்.
தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை நிதீஷ் சந்தித்தார். அப்போது, நிதீஷுக்கு அமித் ஷா மதிய விருந்துஅளித்தார். இந்த சந்திப்பின்போது, மாநில அளவிலும், தேசிய அளவிலும் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமாரிடம், மத்திய அமைச்சரவையில் உங்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, பிகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. எனவே, மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது இயல்பான விஷயம்தான் என்றார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் உங்கள் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் அதிருப்தி அடைந்துள்ளாரே? என்ற கேள்விக்கு, 'எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது. இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல. கட்சியில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கும் என்றால், அவர்கள் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கலாம்' என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இப்போது மக்களவையில் இரு எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக உள்ள சரத் யாதவ், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com