மத்தியப் பிரதேசத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கடந்த 17 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கர் சனிக்கிழமை முடித்துக் கொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்டத்துக்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வலியுறுத்தி, மேதா பட்கர் கடந்த 27}ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். கடந்த 7}ஆம் தேதி, அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறையினர், இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேதா பட்கர் தொடர்ந்தார்.
பின்னர், 9}ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர், தடையை மீறி மீண்டும் தார் மாவட்டத்துக்கு செல்ல முயன்றார். இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், தார் மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறையிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், சர்தார் சரோவர் அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மேதா பட்கரை சனிக்கிழமை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பழச்சாறு அருந்தி, தனது உண்ணாவிரத்தை மேதா பட்கர் முடித்துக் கொண்டார்.